விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Sunday, 3 January 2016

ஆளுர் ஷாநவாஸ் அவர்கள் உரை

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 53 ஆம் மாத நிகழ்வாக நடைபெற்ற கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஆவணப்பட வெளியீட்டு விழா மற்றும் இசை முரசு நாகூர் அனிபா அவர்களின் படத்திறப்பு விழாவில் பங்கேற்று கருத்துரையாற்றிய காயிதே மில்லத் ஆவணப்பட இயக்குனரும் ,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுசெயலாளர் ஆளுர் ஷாநவாஸ்  அவர்கள் உரையாற்றியதாவது ;

இன்றைக்கு இங்கே இரண்டு ஆளுமைகளை மய்யப்படுத்தி நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது.ஒருவர்  கண்ணியத்திற்குரிய தலைவர்  காயிதேமில்லத் மற்றொருவர் இசைமுரசு நாகூர் அனிபா .காயிதே மில்லத் ,நாகூர் அனிபா என்கிற இரண்டு பெயர்களை உச்சரிக்கும்போதே அவர்கள் இஸ்லாமிய சமுகத்தை சார்ந்த ஆளுமைகள் என்று  எல்லோருக்கும் தெரிகிறது. அப்படி 
இஸ்லாம் சமுகத்தை சார்ந்த இரண்டு ஆளுமைகளை நினைவு கூறும் இந்த மன்றத்தில் ஏற்பாடு செய்து இருக்கிற அமைப்போ  இஸ்லாமிய அமைப்பு அல்ல ,முஸ்லிம் லீக் கோ ,தமுமுகவோ ,இன்ன பிற அமைப்போ ஏற்பாடு செய்யவில்லை .நிகழ்வில் பங்கேற்று இருப்பவர்களில் பெரும்பான்மையோர்  முஸ்லிம் சமுகத்தை சாராத பொதுமக்கள் கூடி இருக்கின்ற மன்றமாய்  இந்த நிகழ்வு அமைந்துள்ளது ,இன்னும் சொல்லபோனால் மேடையில் வீற்றிருக்கின்ற தலைவர்களில் ,சிறப்பு விருந்தினர்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம் சமுகத்தை சாராதவர்கள் .முஸ்லிம் சமுகத்தை சார்ந்த இரண்டு ஆளுமைகளை கொண்டாடுகிற ,நினைவுப்படுத்துகிற இந்த அமர்வு பொதுமக்களால் நிரம்பி உள்ளது .முஸ்லிம் சமுகத்தில் இருந்து எத்தனையோ தலைவர்கள்   ,ஆளுமைகள்  தோன்றி உள்ளார்கள் அவர்களை எல்லாம்  பொது சமுகம் இப்படி கொண்டாடி உள்ளதா ?ஏன் காயிதேமில்லத் அவர்களையும் நாகூர் அனிபா அவர்களையும் கொண்டாடுகிறோம் என்றால் அவர்கள் முஸ்லிம் சமுகத்தில் பிறந்திருக்கலாம்  ,முஸ்லிம் பெயரை  தாங்கி இருக்கலாம் ,முஸ்லிமாக அவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கலாம் .ஆனால் அவர்களின் சிந்தனைகள் என்பது பணிகள்  என்பது பொது சமுகத்தை நோக்கியது குறிப்பாக திராவிட இயக்கத்தை நோக்கியது  என்பதால் தான் கொண்டாடப்படுகிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும் .
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தந்தை பெரியாருடன் ,பேரறிஞர் அண்ணா அவர்களுடன் ,முத்தமிழ் அறிஞர் கலைஞருடன் எந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தார்கள் என்பதை வரலாறு முழுக்க பார்க்க முடிகிறது ,இந்தியா பிரிவினை அடைந்த போது இந்தியா பாகிஸ்தான் என நாடு இரண்டாக பிரிந்தபோது இந்தியாவில் இருக்கிற முஸ்லிம்களில் பெரும்பான்மையினர்  குறிப்பாக வடமாநில   உயர் ஜாதி முஸ்லிம்கள்  முஸ்லிம் லீக் கட்சியின் முக்கிய தலைவர்கள்  பாகிஸ்தானுக்கு போய் விட்டார்கள் .இந்தியா தான் வேண்டும் ,இந்த நாட்டை விட்டு போகமாட்டோம் என்று எஞ்சி நின்ற முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய சிக்கல் ,நெருக்கடி ஏற்பட்டது .இங்கு எஞ்சிய முஸ்லிம்கள் மீது துரோக பட்டம் சுமத்தப்பட்டு, நாட்டை பிரிவினைக்கு காரணமானவர்கள் முஸ்லிம்கள்  என்று அவர்கள் மீது பிரிவினை முத்திரை குத்தப்படிருந்த சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவோ ,அவர்களுக்கு முகம் காட்டவோ ,முகவரி கொடுக்கவோ ,அச் சமுகத்தை தலைமை தாங்கவோ  எந்த தலைவருக்கும் துணிச்சல் இல்லை .ஏன்எனில்  நாட்டை கூறு போட்டவர்கள் என்கிற பட்டம் ,பிரிவினைவாதிகள் என்கிற பட்டத்தோடு அச் சமுகத்தை பிரிநிதிப்படுத்த யார் வருவார்கள் ?அப்படிப்பட்ட சூழ்நிலையில் முன்வந்தவர்தான்  காயிதே மில்லத் .அவர் ஓடி ஒளியவில்லை.துணிச்சலாக முன் வந்தார் ,அந்த தைரியம் வடமாநிலத்தை சார்ந்த எந்த முஸ்லிம்களுக்கும் வராத போது தென்மாநிலங்களை சார்ந்த காயிதே மில்லத் அவர்களுக்கு மட்டும் எப்படி வந்தது என்று நாம் பார்க்க வேண்டியுள்ளது .வடமாநிலங்களில் காயிதே மில்லத் அவர்களை விட செல்வாக்குள்ள தலைவர்கள் இருந்த போதும் அவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை .ஆனால் தென் மாநிலத்தில்  தமிழ்நாட்டை சார்ந்த தமிழர் காயிதே மில்லத் அவர்கள் நெருக்கடியான  சூழலில் முஸ்லிம்களுக்கு தலைமை ஏற்கிற துணிச்சல் எங்கிருந்து வருகிறதென்றால் அது தான் பெரியார் இயக்கம் ,திராவிட இயக்கம் இந்த மண்ணை பக்குவப்படுதிருகின்ற சூழல் .அந்த சூழல் தான் காயிதே மில்லத்திற்கு துணிச்சலை கொடுத்தது .
வடமாநிலங்களில் சொல்லலாம் முஸ்லிம்கள் துரோகிகள் என்று ,தென்னாட்டில் அப்படி சொல்ல முடியாது .அப்படி சொல்ல முடியாத அளவிற்கு சூழலை உருவாக்கிய இயக்கம் திராவிட இயக்கம் .முஸ்லிம்கள் யாரோ எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல .அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் ,எங்கள் தொப்புள்கொடி உறவுகள்  என்கிற உணர்வை இந்த மண்ணில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தென்னாட்டில் விதைத்திருக்கிற இயக்கம் திராவிட இயக்கம் .பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது வடமாநிலங்கள் எல்லாம் பற்றி எரிந்தது ,தமிழ் நாட்டில் சின்ன அசம்பாவிதம் உண்டா ?இந்தியா முழுக்க இந்து முஸ்லிம் கலவரம் நடைபெற்றது .தமிழ்நாட்டில் உண்டா ,இந்தியா முழுவதும் வகுப்பு கலவரங்களால் சூறையாடப் பட்டது .தமிழ் நாட்டில் சின்ன அசம்பாவிதம் உண்டா ? தமிழ்நாட்டில் இந்துவத்துவ சக்திகள் காலுன்ற இங்கொன்றும் அங்கொன்றுமாய் சிறு சலனங்கள் ஏற்ப்பட்டதே தவிர இங்கு இந்து முஸ்லிம் கலவரம் என்றோ வகுப்பு மோதல்கள் என்றோ நாம் பார்த்ததே இல்லை .ஏன்? அது தான் முஸ்லிம் மக்களை பற்றி முஸ்லிம் அல்லாத மக்களுக்கும் ,முஸ்லிம் அல்லாத மக்களை பற்றி முஸ்லிம் மக்களுக்கும் திராவிட இயக்கம் ஊட்டியுள்ள புரிதல் .
திராவிட இயக்கத்தின் பங்களிப்பு தான் ,பெரியாரின் அளப்பரிய பங்களிப்பு தான் இந்த மண்ணை பக்குவப்படுத்தி வழிகாட்டும் மண்ணாக மாற்றியுள்ளது .அந்த புரிதலோடு திராவிட இயக்கம் தந்த துணிச்சலால் தான்  காயிதே மில்லத் முஸ்லிம் மக்களுக்கு தலைமை தாங்க முடிந்தது .பெரியார் அவர்களோடு கொண்டிருந்த நட்போடு ,பேரறிஞர் அண்ணா அவர்களிடம் கொண்டிருந்த நடப்போடு காயிதே மில்லத் அவர்களால் பொது தளத்தில் பயணிக்க முடிந்தது .பொது தளமும் அவரை ஏற்றுக்கொண்டது .
முஸ்லிம்களோடு சேர்ந்து நின்றால் நம்மையும் தவறாக நினைப்பார்களோ என்றிருந்த காலம் அந்த நேரத்தில் முஸ்லிம்களோடு ,காயிதே மில்லத் தோடு கை கோர்த்து நின்றார்கள்  தந்தை பெரியாரும்,பேரறிஞர் அண்ணா அவர்களும் .அதே போல் திராவிட இயக்கம் என்றால் பிரிவினைவாத கோரிக்கையை வைக்க கோருபவர்கள் ,திராவிட நாடு கேட்பவர்கள் என்று திராவிட இயக்கத்தின் மீது பிரிவினைவாத முத்திரை குத்தப்பட்டபோது திராவிட இயக்கத்தை முஸ்லிம்கள் அரவணைத்து,மேடை போட்டு கொடுத்த வரலாறு தமிழ்நாட்டின் வரலாறு .
இந்த வரலாற்றின் தொடர்ச்சி தான் இந்த மேடையும் ,இந்த நிகழ்வும் .இது நீண்ட நெடிய வரலாற்றின் தொடர்ச்சி ,இந்த  தொடர்ச்சி தலைமுறை கடந்து தொடரவேண்டும் .உலகம் உள்ள வரை தொடரவேண்டும் என்பதற்கான முயற்சி தான் இந்த  அரங்கம்  .இங்கே காயிதே மில்லத் அவர்களை நினைவு கூர்கிறோம் என்றால் முஸ்லிம்கள் தனியே ,தலித்துகள் தனியே ,ஒடுக்கப்பட்டவர்கள் தனியே என்று தனித்தனியாக அடையாளப்படுத்துவதற்கு அல்ல இங்கே  காயிதே மில்லத்தை நினைவு கூர்வது ஒரு சமுகத்தின் முன்னேற்றத்திற்காக ,ஒரு விளிம்பு நிலை சமுகம் அடுத்த கட்டத்திற்கு வரவேண்டும் என்பதற்காக சமூகநீதி அடிப்படையில் சிந்தித்து சமுகத்திற்காக பணியாற்றுவது தவறில்லை.ஆனால் நமது நோக்கு என்பது பொதுச்சமுகத்தின் மேன்மைக்காக இருக்க வேண்டும் .நமது பயணம் என்பது பொதுச்சமுகத்தினை  நோக்கியதாக இருக்க வேண்டும் .
அதைதான் காயிதே மில்லத்தும்  நமக்கு கற்று கொடுத்திருக்கிறார் .அவர் முஸ்லிம் லீக்கின் தலைவர் தான் ஆனால் அரசியல் நிர்ணைய சபையில் இந்தியாவின் ஆட்சிமொழி எது என்று விவாதம் வந்த போது தமிழ்நாட்டில் இருந்து சென்ற எத்தனையோ  உறுப்பினர்கள் அந்த மன்றத்தில் இருந்தார்கள் .எல்லோரும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்கள் .வடமாநிலங்களை சார்ந்த உறுப்பினர்கள் இந்தியாவின் ஆட்சிமொழி எது என்று விவாதம் வந்த போது உடனே எழுந்து சொன்னார்கள் இந்தி ஆட்சி மொழியாக வரவேண்டும் என்று .எந்த அடிப்படையில் இந்தியை சொல்லுகிறீர்கள் என்று கேட்டபோது இந்தி பேசும் மாநிலங்களை சார்ந்த உறுப்பினர்கள் சொன்னார்கள் இந்தி தான் தொன்மையான மொழி ,இந்தி தான் மூத்த மொழி ,இந்தி தான் வரலாற்று சிறப்பு இயல்புகளை கொண்ட மொழி என்று இந்தியின் சிறப்புகளை பட்டியலிட்டார்கள் .இந்தியாவில் அதிகம் பேர் பேசும் மொழி இந்தி என்பதற்காக நாங்கள் வலிவுருத்தவில்லை ,இந்தி தான் தொன்மையும் சிறப்பும் கொண்ட மொழி என்பதற்காக வற்புறுத்துகிறோம் என்று அவர்கள் சொன்னவுடன் காயிதே மில்லத் எழுந்து இந்தியாவின் மூத்த மொழி தொன்மையான மொழி இந்தி என்பதால் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் அதை என்னால் ஏற்று கொள்ள முடியாது என்னென்றால்  இந்தியாவின் மூத்த மொழி தொன்மையான மொழி என்னுடைய தாய் மொழி  தமிழ் தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்று  ஒற்றை குரலில் காயிதே மில்லத் அவர்கள் வாதிட்டார்கள் .அன்றைக்கு அந்த மன்றத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தை சார்ந்த தமிழக உறுப்பினர்கள் இருந்தார்கள் .உயர் வகுப்பினை சார்ந்த பலர் உறுப்பினர்களாக இருந்தனர் ,ஆனால் தமிழ் மூத்த மொழி ,தொன்மையான மொழி என்று பதிவு செய்ய அவர்கள் யாருக்கும் தோன்றவில்லை காயிதே மில்லத்திற்கு மட்டும் தோன்றியது .அங்கே அவர் முஸ்லிம் தலைவராக குறுகி போகவில்லை தமிழ் சமுகத்தின் தனிப்பெரும் தலைவராக உயர்ந்து நின்றார் .அவர் திருநெல்வேலி மாவட்டம்  பேட்டையத்தில் பிறந்த பச்சை தமிழர்  அதனால் தமிழ் உணர்வோடு உயர்ந்து நின்றார் .
அப்போது திராவிட இயக்கம் மிக பெரிய கட்சியாக உருவெடுக்காத காலம் 1948 .திராவிட முன்னேற்ற காலம் அந்த காலத்தில் தான் தொடங்கப்பட்டது .அரசியல் நிர்ணயசபை போன்ற அதிகாரம் மிக்க அவையில் திராவிட இயக்கம் பங்கு பெற முடியாத காலம் அது .அந்த நேரத்தில் இடம் பெற்றிருந்த காயிதே மில்லத் ,திராவிட இயக்க உறுப்பினர்கள் ,திமுகவின் உறுப்பினர்கள் பெரியாரின் பிள்ளைகள் ,அண்ணாவின் தம்பிகள் அந்த அவையில் இடம் பெற்றிருந்தால் எத்தகைய தமிழ் உணர்வோடு பேசியிருப்பார்களோ அதே உணர்வுடன் அதே துடிப்புடன் செயலாற்றியவர் தான்  காயிதே மில்லத்
அப்படி உரையாற்றிவிட்டு தமிழகம் வந்த போது திராவிட இயக்கத்தை சார்ந்தவர்கள் அண்ணா தலைமையில் காயிதே மில்லத் அவர்களை வரவேற்று நாங்கள் அந்த அவையில் இருந்தால் என்ன செய்திருப்போமோ அதை நீங்கள் செய்து உள்ளீர்கள் நன்றி ! என்று சொன்னார் அண்ணா. இது தான் புரிதல் .அதனால் தான் இங்கே காயிதே மில்லத் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டுள்ளது .அண்ணாவை முதலமைச்சராக்க வேண்டும் திராவிட இயக்கம் ,திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்கிற கோட்பாட்டு புரிதலோடு ஆளுகின்ற காங்கிரஸ் இயக்கத்தை அகற்ற வேண்டும் என்கிற புரிதலோடு கை கோர்த்த இயக்கம் முஸ்லிம் இயக்கம்.1967திராவிட முன்னேற்ற கழகம்  ஆட்சியை பிடித்தபோது கூட்டணியில் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்று பார்த்தால் இராஜாஜி இருந்தார் ,மபொசி இருந்தார் ,சி .பா .ஆத்திதனார் இருந்தார்,கம்யூனிஸ்ட் தலைவர் இராமமூர்த்தி இருந்தார் .எல்லோரும் எப்போது வந்தார்கள் 1967 இல் வந்தார்கள் ஆனால் அதற்க்கு முந்திய தேர்தலில் 1957 இல் திமுக தேர்தலில் பங்கேற்க தொடங்கிவிட்டது .1962 இல் திமுக மிகப் பெரிய வெற்றியை பெறுகிறது ,50 தொகுதிகளுக்கு மேல் பெற்றது ,அந்த 1962 தேர்தலிலேயே திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சி முஸ்லிம் லீக் .
    முஸ்லிம் லீக் கிற்கும்  திராவிட இயக்கத்திற்குமான உறவு என்பது குறிப்பாக திமுக விற்குமான உறவு  என்பது மற்ற கட்சிகளை போல் சேர்த்த உறவல்ல .இயல்பாக சேர்ந்த உறவு .திமுக வரலாற்றில் கூட்டணி என்று வைத்தது என்றால் முதன் முதலில் முஸ்லிம்களுடன் தான் ,முஸ்லிம் லீக் உடன் தான் .அது தான் வரலாறு .எவ்வளவு அரசியல் மாற்றங்கள் வந்தாலும் கால மாற்றத்தில் எவ்வளவோ புதிய கட்சிகள் எழுந்து வந்தாலும் திராவிட இயக்கத்திற்கும் முஸ்லிம்களுக்குமான உறவை ஏன் பிரிக்க முடியவில்லை என்றால் அது பிரிக்கவே முடியாத அளவிற்கு மிக வழுவாக அடித்தளம் போடப்பட்டுள்ளது .அதனால் தான் அந்த சமுகத்தின் உணர்வுகளை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத போது திராவிட இயக்கத்தினரால் ,பெரியாரிய கொள்கைகளை உள்வாங்கியவர்களால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது .முஸ்லிம்கள் இடஒதுக்கீடு கேட்கிறார்களா ? தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 1995 இல் இடஒதுக்கீடு  கோரிக்கையை வலியுறுத்தியது .இடையில் எத்தனையோ முதலமைச்சர்கள் வந்தார்கள் .எத்தனையோ ஆட்சிமாற்றம் வந்தது ,அம்மையார்  ஜெயலலிதா  அவர்களை அழைத்து வந்து தமுமுக மாநாடு போட்டது .முஸ்லிம்களுக்கு நான் இட ஒதுக்கீடு பெற்று தருவேன் என்று அறிவித்தார் ஜெயலலிதா.ஆனால் மாநாடு போட்டு வாக்குறுதி கொடுத்த ஜென்யலலிதா அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை அந்த மாநாட்டில் பங்கேற்காத கலைஞர் தான் வாக்குறுதியை நிறைவேற்றி தந்தார் .ஏன் அது தான் சமுக நீதி  பார்வை ,திராவிட இயக்க பார்வை ,பெரியாரிய பார்வை அந்த சமுகம் எதற்க்காக இடஒதுக்கீடு கேட்கிறது என்பதை அவர்களால் தான் புரிந்து கொள்ள முடியும் .ஜெயலலிதாவால் புரிந்து கொள்ள முடியாது
       ஆக திராவிட இயக்கம் இந்த மண்ணில் ஆற்றியிருக்கிற பங்களிப்பு தான் இன்றைக்கும் இந்த சமுக உறவை நல்லிணக்க உறவை வளர்த்தெடுத்து கொண்டிருக்கிறது .இஸ்லாமிய சமூகத்துடன் திராவிட இயக்கம் நெருக்கமாக இருப்பதினால் மற்ற சமுகத்திற்கு எதிராக நிற்கிறது என்று பொருள் கொள்ள தேவையில்லை .எல்லா சமூகங்களுக்கும் சமுக நீதி வேண்டும்  பார்ப்பன சமுகம் உள்பட  என்று பேசுகிற உலகத்தில் ஒரே இயக்கம் திராவிட இயக்கம் மட்டும் தான் .
      தன் இனம் வாழ வேண்டும் மற்ற இனம் அழியவேண்டும் என்று தான் உலகம் முழுவதும் இயக்கம் நடைபெறுகிறது .ஆனால் எதிரி இனத்திற்கும் அவன் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பிரதிநித்துவம்  கிடைக்கவேண்டும் என்று சொல்லுகிற  இயக்கம் திராவிட இயக்கம் தான் அந்த அடிப்படையில் எல்லா மக்களுக்குமான இயக்கம் திராவிட இயக்கம் என்பதை புரிந்து கொண்டதினால் தான் காயிதே மில்லத்தால் துணிந்து அந்த இயக்கத்துடன் பயணிக்க முடிந்தது .
 காயிதே மில்லத் தீவிர மார்க்க பற்றாளர் .இறை நம்பிக்கை உள்ளவர் ,தந்தை பெரியாரோ   கடவுள் இல்லை ,மதம் ஒழிக என்று சொன்னவர் .இருவரும் நேர் எதிரான கருத்துக்களை கொண்டவர்கள் .ஆனால் இருவரும் நெருக்கமாக முடிந்தது என்றால் மதத்தை தாண்டிய பார்வை சமுக நீதி பார்வை இருந்ததினால் தான் இணைய முடிந்தது .60 ஆண்டுகளுக்கு முன்னரே நாம் யாரோடு பொதுத் தளத்தில் இணைந்து நிற்கவேண்டும் ,நமது எதிரி யார் ? நமது நண்பன் யார் என்கிற பார்வை காயிதே மில்லத் அவர்களுக்கு இருந்தது .அதனால் தான் அந்த தலைவரை அவர் முஸ்லிம் தலைவர் என்று பார்க்காமல் அவர் எல்லோருக்குமான தலைவர் ,தமிழுக்காக பேசிஇருக்கிறார் ,தமிழ் ,தமிழ்நாட்டின் மேம்பாடிற்க்காய் பேசி இருக்கின்றவர் என்கிற அடிப்படையில் திராவிட இயக்க உணர்வோடு கட்சி நடத்தியவர் ,தன் மக்களை நடத்தியவர் என்கிற புரிதலோடு  இந்த மன்றத்தில் கூடி இருக்கிறோம்
காயிதே மில்லத் அவர்களை போலவே நாகூர் அனிபா அவர்களும் திராவிடர் இயக்க உணர்வை பெற்றவர் .அவர் இஸ்லாமிய பாடகர் என்பது எல்லோருக்கும் தெரியும் .இறைவனிடம் கையேந்துங்கள் என்கிற புகழ் பெற்ற பாடலுக்கு சொந்தகாரர் .இஸ்லாமியர் என்கிற வட்டத்தை தாண்டி அனைத்து மத நம்பிக்கையாலர்களாலும் கொண்டாடப்படுபவர் .அவரது பாடல் குன்றக்குடி மடத்தில் ஒலிக்கிறது ,அவரது பாடல் மதுரை ஆதின மன்றத்தில் ஒலிக்கிறது .தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்களில் எல்லாம் நாகூர் அனிபா பாடல் ஒலிக்கிறது .அப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை உள்ளவர் தன்னுடைய இயக்கம் ,தன்னுடைய அரசியல் ,தன்னுடைய அரசியல் பணி என்று வரும்போது அவர் முஸ்லிம் லீக்கில் சேரவில்லை .திராவிட இயக்கத்தில் சேர்ந்தார் .காயிதே மில்லத்தை தலைவர் என்று ஏற்று கொள்ளாமல் பெரியாரை தலைவராக ஏற்று கொண்டார் .அண்ணாவை தலைவராக ஏற்று கொண்டார் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்
 எத்தனையோ பேர் நாகூர் அனிபா அவர்களிடம் சென்று ''நீங்கள் இஸ்லாமிய பாடகர் ,இஸ்லாமிய மேடைகள் தான் உங்களுக்காக கச்சேரி அமைக்க கூடிய மேடையாக உள்ளது .நீங்கள் முஸ்லிம் லீக் இல் இணைந்தால் இன்னும் உங்கள் வளர்ச்சிக்கு பயன்படும்'' என்று சொன்னபோது இல்லை இல்லை நான் சின்ன வயது முதல் திராவிட இயக்கத்தை ஏற்று கொண்டிருக்கிறேன் ,என்னுடைய இயக்கம் என்பது திராவிட இயக்கம் என்று சொல்லி 90 வயது வரை தன்னுடைய இறுதி மூச்சு அடங்கும்வரை ஏறக்குறைய 75 ஆண்டுகள் திமுகவிலேயே கரைந்து போனார்.திராவிட இயக்கத்தை தாண்டி ,திமுகவை தாண்டி அவர் சிந்தித்ததே இல்லை .
திருவாரூரில் உள்ள ஒரு  ஆற்றின் கரையில் நீதிகட்சிக்கான கூட்டம் நடக்கும் .1935-,40 களில் அப்போது திராவிட இயக்கத்தை நோக்கி மக்களை திரட்டுவதற்காக அங்கே திராவிட இயக்க உணர்வால் ஈர்க்கப்பட்ட இளம் சிறார்கள் மேடை அமைத்து கூட்டம் நடத்துவதற்கான  ஏற்பாட்டை செய்கிறபோது ,மணல் மேடை அமைத்து கூட்டத்தை திரட்டுவதற்காக 15 வயது சிறுவனான அனிபா பாடுவாராம் .அனிபா அவர்களின் காந்தார குரல் ஒலித்தவுடன் அங்காகே சிதறி இருந்த மக்கள் மேடை நோக்கி கூடுவார்களாம் .கூட்டம் திரண்டவுடன் அரைகால் சட்டை அணிந்த ஒருவர் பேசுவார் .கூட்டத்தின் சிறப்பு பேச்சாளர் அவர் தான் ,அவர் தான் கலைஞர் !
15 வயதில் அரசியல் களத்தில் வந்த காலத்தில் இருந்தே கலைஞரும் நாகூர் அனிபா அவர்களும் உறவு கொண்டவர்கள் .அவர்கள் இருவரும் கொண்டிருந்த நட்பு 75ஆண்டு கால நட்பு ,மனக் கசப்பே வராத நட்பு,கீறலே விழாத நட்பு ,லாப நட்ட கணக்குகளை பார்க்காத நட்பு ,இப்படி 75ஆண்டு காலம் ஒரு நட்பு தொடர முடியுமா ? தனிப்பட்ட முறையில் என்றிருந்தால் நட்பு தொடர்ந்து இருக்க முடியாது .கொள்கைக்காக என்பதால் தான் நட்பு தொடர்ந்தது .
பெரியாரை பற்றி நாகூர் அனிபா அவர்கள் தான் இசைதட்டில் பாடல் பதிவு செய்தார் .இது பலரும் அறிந்திராத செய்தி !பெரியார் பற்றி முதன்முதலில் பாடல் பாடப்பட்டது என்றால் அதுவும் அந்த பாடல் இசை தட்டில் பதிவு செய்யப்பட்டு மக்கள் மன்றத்திற்கு வந்தது என்றால் அது நாகூர் அனிபா பாடியது தான் .''பேரறிவாளர் அவர் பெரியார் ....தாழ்ந்து கிடந்த நம்மை தட்டி தூக்கி அணைத்த பெரியார் வெ ரா வே !''என்ற பாடல் தான் அவர் பாடி இசைதட்டில் பதிவு செய்யப்பட்டது .பெரியார் நாகப்பட்டினம் சுற்றுப்பயணம் போகும்போதெல்லாம் நாகூர் அனிபா அவர்களை அழைத்து பாடசொல்லி கேட்கிற வரலாற்று குறிப்புகள் எல்லாம் பார்க்க முடிகிறது .நாகூர் அனிபா பாடலை கேட்டு அந்த மகிழ்வில் தன் சட்டை பையிலிருந்து 1ருபாய் ,2ருபாய் காசுகளை பெரியார்  ஒரு முறை கொடுத்திருக்கிறார் .அப்போது அங்கே இருந்த திராவிடர் இயக்க தோழர்கள் சொல்வார்களாம் ,பெரியாரிடம் பாராட்டு வாங்குவதே சிரமம் .அனிபா பரிசே வாங்குகிறாரே என்று .அய்யா பெரியார் சின்ன வயதினரை கூட அய்யா என்று தான் மரியாதையாக அழைப்பார்.அய்யா அவர்கள் சொல்லுவாராம் ''அனிபா அய்யா பாடினால் ஒலிபெருக்கி தேவை இல்லை ''என்று சொல்லுவாராம் .
1957 இல் திமுக வின் முதல் தேர்தல் நாகப்பட்டினம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நாகூர் அனிபா போட்டி இடுகின்றார் .அப்பொழுது அண்ணா அவர்கள் சொல்லுகிறார் ஏன் நாகூர் அணிபாவை வேட்பாளராக அறிவித்தோம் என்றால் நமது உதயசூரியன் சின்னம் இன்னும் பிரபலமாகவில்லை சின்னம் பிரபலமாகவில்லை என்றால் ஒரு பிரபலமானவர் போட்டி இட வேண்டும் .அதனால் தான் அனிபா விற்கு வாய்ப்பு கொடுத்தேன் என்று சொல்லுகிறார் ,அந்த அளவிற்கு அந்த காலத்தில் பெரிய ஆளுமையாக இருந்திருக்கிறார் அனிபா .அந்த தேர்தலில் பெரியார் அவர்கள் திமுகவை ஆதரிக்கவில்லை .காமராஜர் முதல்வராக தொடர வேண்டும் என்கிற நோக்கத்தில் பெரியார் காங்கிரெசை ஆதரிக்கிறார் .திமுகவை எதிர்கிறார் .நாகப்பட்டினம் தொகுதியில் காங்கிரெஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வருகிறார் பெரியார் .பெரியாரிடம் போய் சிலர் கேட்கின்றனர் ''உங்கள் செல்ல பிள்ளையான நாகூர் அனிபா போட்டி இடுகின்றார் அவரை ஆதரிக்காமல் காங்கிரெஸ் வேட்பாளரை ஆதரிகிறீர்களே ?''என்று கேட்ட போது அனிபா செல்ல பிள்ளைதான் ,ஆனால் அணிபாவை ஆதரிக்க முடியாத சூழல் இப்போது ,அனிபா மீதான அன்பு என்றைக்கும் தொடரும் அனால் இந்த தேர்தலில் மட்டும் இல்லை பெரியார் .
   பெரியாருக்கும் அனிபா அவர்களுக்குமான நெருக்கத்தை பற்றி அனிபா
சொல்லும்போது ''அந்த காலத்தில் நீதிக்கட்சி கூட்டங்கள் நடக்கும் .நீதிகட்சி கூட்டம் என்றால் சர் பட்டம் பெற்ற பண்டிதர்கள் ,ஜரிகை துண்டு ,தலைப்பாய் கட்டி தலைவர்கள் அமர்ந்திருபார்கள் .அந்த மேடையில் லுங்கி கட்டி கொண்டு இருப்பவர்கள் இரண்டே இரண்டு பேர் தான் ஒன்று பெரியார் மற்றொன்று நான் ''என்று சொல்லுகிறார் அனிபா
இந்த மன்றத்தில் காயிதே மில்லத் அவர்களையும் நாகூர் அனிபா அவர்களையும் இணைத்து இயக்கம் விழா எடுக்கிறது ,பெரியார்  ,பெரியார் ,நாகூர் அனிபா மூவரையும் இணைத்து நடந்த ஒரு நிகழ்வு இன்றைக்கு வெளியிட்ட காயிதே மில்லத் ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது .1972 இல் காயிதே மில்லத் மரணித்து விடுகிறார் ,பொது மக்களின் பார்வைக்காக அவரது உடல் சென்னை புதுக்கல்லூரியில் வைக்கப்படுகிறது ,காயிதே மில்லத் உடல் அருகே அமர்ந்து நாகூர் அனிபா காயிதே மில்லத்திற்கு பிடித்த பாடல்களை பாடிக்கொண்டிருக்கிறார் ,பெரியார் அவர்களின் வேன் வந்தவுடன் பாடிகொண்டிருந்த நாகூர் அனிபா ஓடோடி வேன் அருகே செல்கிறார் அய்யா பெரியார் பக்கத்தில் இருந்த ஆசிரியர் வீரமணி ''அய்யா அனிபா அண்ணன் வந்திருக்கிறார் "என்று சொல்ல அய்யா அவர்களோ வாங்க வாங்க தம்பி ! நல்லா இருக்கிங்களா என்று சொல்லி நாகூர் அனிபா அவர்களும் ஆசிரியர் வீரமணி அவர்களும் அய்யாவை கைதாங்கலாக பிடித்து கொண்டு வேனிலிருந்து  இறங்குகிறார்கள் .காயிதே மில்லத் அவர்களின் உடலை காண போகும் வழியில் விசும்பி கொண்டே கண்ணீர் மல்க பெரியார்  ''தம்பி தம்பி நீங்க போய்டீங்களா  இனி இந்த சமுதாயத்தை யார் காப்பாற்றுவார்கள்"என்று சொல்கிறார்.என்கிற இந்த நிகழ்வையும் இன்றைக்கு வெளியிட்ட ஆவணப் படத்தில் பதிவு செய்திருப்பவரும் நாகூர் அனிபா தான் .
பெரியார் காயிதே மில்லத் ,நாகூர் அனிபா ஆகியோருக்கு இடையே இருந்த நெருக்கமான அன்பால்  ,அவர்கள் பண் படுத்தி கொடுத்த  இந்த மண்ணில் தான் இன்றைக்கு சமுக நீதிக்கு வெட்டு வைக்க படுகிறது .இன்றைக்கு அய்.அய்.டியில் என்ன நடக்கிறது .அய்.அய்.டியை உருவாக்கியவர்கள் யார் ?இன்றைக்கு அய்.அய்.டி என்பது உயர் கல்வி நிறுவனமாக இல்லை உயர்ஜாதி நிறுவனமாக உள்ளது ,அதை உருவாக்கியது யார் ? அதிகாரத்தில் வீற்றிருந்த பார்ப்பனர்களா உருவாக்கினார்கள் .மௌலான அபுல்காலம் ஆசாத் உருவாக்கினார் .அவர் இஸ்லாமியராக இருந்தாலும் பொதுச் சமுகத்திற்காக சிந்தித்த தேசிய தலைவர் அவர் .இந்திய கல்வி உலக தரத்திற்கு ஈடாக  வர வேண்டும் என்கிற தேசிய ,பொது பார்வையோடு அய்.அய்.டியை கொண்டு வந்தவர் அபுல் கலாம் ஆசாத் .ஆனால் இன்றைக்கு அய்.அய்.டியில் என்ன நடக்கிறது? மௌலான அபுல்காலம் ஆசாத்  கண்ட கனவின் படிதான் அய்.அய்.டி நடக்கிறதா ?என்றால் இல்லையே ஒரு குறிப்பிட்ட இனம் அங்கே உட்க்கார்ந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கிறது . அய் அய்.டியில். பணியாற்றும் பேராசிரியர்கள் 90 விழுக்காட்டினர்  ஒரு மதத்தை சார்ந்தவர்கள் அல்ல .ஒரு இனத்தை சார்ந்தவர்கள் .5௦௦ பேராசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் 450க்கும் மேற்ப்பட்டவர்கள் பார்ப்பன இனத்தை சார்ந்தவர்கள் .1௦௦௦ மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் 800 மாணவர்களுக்கு மேற்ப்பட்டவர்கள் ஏறக்குறைய 80% மேற்பட்ட மாணவர்கள் பார்ப்பன இனத்தை சார்ந்தவர்கள் .தமிழ்நாட்டில் அய் அய் டி வாளாகத்தில் முழுக்க முழுக்க பார்ப்பன சமுகம் மட்டுமே ஆதிக்கம் செய்து வருகிறது .அதனால் தான் பெரியார் அம்பேத்கார் பெயரில் இயங்கி வந்த வாசகர் வட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .எத்தகைய துணிச்சல் ?பெரியார் மண்ணிலேயே பெரியார் பெயரில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் அமைப்பிற்கு தடை .ஏன் தடை என்று கேட்டால் விதியை மீறினார்கள்.அரசியல் பேசினார்கள் என்கிறார்கள் . அரசியல் பேசுவது குறித்து அய் அய் டி பேசலாமா ? இதற்க்கு முன்னால் மோடி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக அதே அய்அய்டி வளாகத்தினுள் காங்கிரெஸ் ஆட்சியை விமர்சித்து இந்து மத வெறி மாணவர்  அமைப்பு கூட்டம் நடத்தவில்லையா ? நடத்தினார்கள்  குஜராத் கலவரத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்திய மனித உரிமை ஆர்வலர்  ஒருவரை அய்அய்டி வளாகத்திற்கு மாணவர் அமைப்பின் அழைப்பின் பேரில் கருத்தரங்கில் உரையாற்ற அழைக்கபட்டிருந்தார் .அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினரை  பேச விடமால் கருத்தரங்கில் இந்து மதவெறி மாணவர் அமைப்பு கலவரம் செய்ததது .அப்போது அது அரசியலாக தெரியவில்லையா ?
அதே அய்அய்டி வளாகத்திற்குள் ஆடிட்டர் குருமூர்த்தியும் ,சுப்பிரமணிய சாமியும் இந்து மதவெறி மாணவர் அமைப்பால் அழைக்கப்பட்டனரே  அவர்கள் என்ன அங்கே சுப்பிரபாரதம் பாடவா வந்தார்கள் .அது அரசியலாக தெரியவில்லையா ?
     அரசியல் பேசுவது அய்அய்டியின் பிரச்சனை அல்ல .எந்த அரசியல் பேசுகிறார்கள் என்பது தான் பிரச்சனை .இடஒதுக்கீடு பிரச்சனையின் போது அய்அய்டியில் உள்ள உயர் ஜாதி மாணவர்கள் எல்லோரும் வீதிக்கு வந்து போராடினார்களே அது அரசியல் இல்லையா ?இடஒதுக்கீடு வேண்டாம் என்று போராடிய மாணவர்களை அனுமத்தித்த நிர்வாகம் இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடும் பெரியாரிய மாணவ அமைப்பிற்கு மட்டு ம் தடை விதிப்பது ஏன்?இந்த மாணவர்கள் பெரியாரின் அரசியலையும் அம்பேத்காரின் அரசியலையும் பேசுவது தான் அய்அய்டியின் பிரச்சனை .
விதிமீறல் என்கிறார்கள் ,விதிமீறலை பற்றி பேசுவதற்கு அய்அய்டிக்கு எந்த தகுதியும் கிடையாது .இடஒதுக்கீடு சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தபடுத்தப்பட்ட மாணவர்களுக்கு  கல்வியில் ஒதுக்கீடு பெற்ற பின்னரும் இடஒதுக்கீட்டை அமுல்படுத்தாத கல்வி நிறுவனம் தான் அய்அய்டி.இது சட்ட மீறல் இல்லையா ?சட்ட மீறலை செய்த அய்அய்டி நிறுவனத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
பணியாளர்களை எப்படி தேர்வு செய்கிறார்கள் ? முனைவர் பட்டம் பெற்ற 54 தலித் பேராசிரியர்கள்  2011 பேராசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கிறார்கள் .இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அவர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் .ஆனால் அய்அய்டி நிர்வாகம் பணியிடங்கள் வழங்குவதற்கு பதிலாக அவர்களில் எட்டு பேருக்கு மட்டும் இன்டர்வியூக்கு அழைப்பு அனுப்பியது .இன்டர்வியூக்கு பின்னர் யாருக்கும் பணியிடம் வழங்கப்படவே இல்லை .அந்த பணியிடங்களில் பார்ப்பனர்கள் நியமிக்கபட்டிருக்கிறார்கள் .முனைவர் பட்டம் பெற்ற தகுதியுடைய பேராசிரியர்கள் நியமிக்கபடாமல் முனைவர் பட்டமே பெறாத தகுதியே இல்லாத பார்ப்பனர்கள் அந்த பணியிடங்களுக்கு நியமிக்க பட்டுள்ளார்கள் .
        வசந்தா கந்தசாமி என்கிற உதவி பேராசிரியர் .பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் .உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி.பல ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்துள்ளார் .பல நூல்களை எழுதியுள்ளார் .பதிமூன்றுக்கும் மேற்ப்பட்ட  முனைவர்களை உருவாக்கியுள்ளார் .இப்படி உச்ச பட்ச  தகுதிகள் இருந்தும் இன்னும் அவரை  உதவிப் பேராசிரியர் என்கிற நிலையிலேயே வைத்துள்ளது அய்அய்டி நிர்வாகம் .ஒரே ஒரு ஆய்வு மாணவனை கூட உருவாக்காத ,தகுதியே இல்லாதவர்களை பேராசிரியராக நியமித் துள்ளது  அய்அய் டி நிர்வாகம் . பதிமூன்றுக்கும் மேற்ப்பட்ட  முனைவர்களை உருவாக்கிய வசந்தா கந்தசாமி பிற்படுத்தபட்டவர் என்பதால் உதவிப் பேராசிரியர் ,ஒரே ஒரு முனைவரை கூட உருவாக்காத மற்றவர்கள் பார்ப்பனர்கள் என்பதற்காக பேராசிரியர் என்றால் அது எவ்வளவு பெரிய சமுக அநீதி .அய்அய்டியிலேயே படித்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை  முரளிதரன் என்பவர் மேரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளில் கல்வி நிலையங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் .அவர் தொடர்ந்தது எட்டு முறை பேராசிரியர் பணிக்காக அய்அய்டியில் விண்ணபித்துள்ளார்.பிற்படுத்தப்பட்டவர் என்கிற ஒரே காரணத்திற்க்காக தகுதி இருந்தும் அவரது விண்ணப்பம் நிராகரிக்க படுகிறது .மெரிக்காவில் தகவல் தொழில் நுட்ப துறை வீழ்ச்சி அடைந்த போது பல பேர் வேலை வாய்ப்பினை இழந்தார்கள் .இதில் பார்ப்பனர்கள் தான் பெரும்பான்மையாக பாதிக்கபட்டனர் .அப்படி வேலை இழந்த பார்ப்பனர்களிடம் தொலைபேசி மூலம் இண்டர்வியூ நடத்தி வேலை தந்தது அய்அய்டி நிர்வாகம் .இந்தியாவிலேயே தொலைபேசி மூலம் இன்டெர்வியூ நடத்துகிற ஒரே கல்வி நிறுவனம் அய்அய்டியாகத் தான்  இருக்க முடியும் .அந்த அளவிற்கு பார்ப்பனர்களின் நலன் குறித்து அந்த நிறுவனம் கவலைபடுகிறது .முழுக்க முழுக்க சட்ட மீறல் ,விதி மீறல் நிகழ்த்துகிற நிறுவனமாய் தமிழ்நாட்டில் அய்அய்டி உள்ளது .இன்றைக்கு மாணவர் அமைப்பிற்கு தடை போடுகிற செய்தி என்பது புதியதல்ல ,திராவிட இயக்கத்திற்கு எதிராக சமுகநீதிக்கு எதிராக முழு நேரமும் செயல்படுகிற அமைப்பாக  அய்அய்டி நிறுவனம் உள்ளது .ஆனால் அதற்க்கு எதிரான கொந்தளிப்பு என்பது தமிழ்நாட்டில் இல்லை .இன்றும் தகுதி இருந்தும் வசந்தா கந்தசாமி உதவிப் பேராசிரியராகத் தான் உள்ளார் .தகுதி இருந்தும் இன்றும் முரளிதரனுக்கு வேலை கிடைக்கவில்லை .இப்படி ஆதிக்க வெறியோடு ,சமுகநீதிக்கு எதிராக செயல்படுகிற நிறுவனத்தை கேள்வி கேட்க வேண்டிய தருணம் இந்த தருணம் .பெரியார் அம்பேத்கார் வாசகர் வட்ட தடையை கொண்டு தமிழகத்தில் உள்ள அணைத்து இயக்கங்களும் போராடவேண்டிய தேவை ஏற்ப்பட்டுள்ளது .

        அய்அய்டி அமைந்த பகுதி மரங்கள் அடர்ந்த பகுதி .ஒரு மரத்தை வெட்ட வேண்டுமானாலும் அனுமதி பெற்ற பிறகே செய்ய வேண்டும் .அப்படி எந்த அனுமதியையும் பெறாமல் மரங்களை வெட்டி வெட்டி கடத்தி இருக்கிறார்கள் .மரம் வெட்ட காண்டிராக்ட் யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டால் அதுவும் ஆதிக்க ஜாதியினருக்கே கொடுக்கப்பட்டுள்ளது .மரம் வெட்டிய இடத்தில் புதியதாக கட்டிடம் கட்ட காண்டிராக்ட் யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டால் அதுவும் ஆதிக்க ஜாதியினருக்கே கொடுக்கப்பட்டுள்ளது.அங்கே டீன் ஆக இருப்பவர் ,நிர்வாக பொறுப்பில் உள்ள அனைவரும் உயர் ஜாதியை சார்ந்தவர்களே .நானுறு கோடி ருபாய் மத்திய அரசு கொடுக்கிறது .நம்முடைய மக்கள் வரிப்பணத்தில் இயங்குகிற அந்த நிர்வாகத்தில் மக்களுக்கான பிரதிநித்துவம் இல்லை .அது மட்டும் அல்ல அங்கே குறிப்பிட்ட ஒரு இனத்தின் வழிபாட்டு தளம் உள்ளது .அது அரசின் இடம் ,அரசின் கல்வி நிறுவனம் .ஆனால் அரசு இடத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் சின்னமோ ,வழிபாட்டு தளமோ இருக்க கூடாது என்பது விதி .மிக வெளிப்படையாக சட்ட மீறல் நடந்து கொண்டு வருகிறது .இதையெல்லாம் விழிப்புணர்வுடன் புரிந்து கொண்டு அதைக் கைப்பற்ற வேண்டிய பொறுப்பு பெரியாரின் பிள்ளைகளுக்கு உள்ளது .அது தான் இன்றைய கூடலுக்கான செய்தி  என்று உரையாற்றினார்

No comments:

Post a Comment